Pages
▼
Tuesday, June 25, 2013
MP Yogarajan Condamn the government's activities
அரசாங்கத்தின் அராஜக செயலை கண்டிக்கிறார் யோகராஜன் எம்.பி.
பல்வேறு காரணங்களினால் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து அகதிகளாக எண்ணற்ற கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்கள் இன்று தமது வழிபாட்டுத்தலங்களையும் இழந்து கடவுளையும் தற்காலிக இடங்களில் வைக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த நிலைமையானது மிகவும் வேதனையளிக்கிறது என்கிறார் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன்.
நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் பற்றி நாள்தோறும் பேசி வரும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இவ்வாறு தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி, பூமாரியம் மன் ஆலயம் அகற்றப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
80வருடங்களுக்கு மேலாக பழைமை வாய்ந்த வரலாற்று சிறப்புக் கொண்ட கொள்ளுப்பிட்டி பூமாரியம்மன் ஆலயம் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளமையால் அப்பகுதி வாழ் தமிழ் மக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளார்கள். இது போன்ற செயற்பாடுகளால் இனங்களுக்கிடையே எப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.
அபிவிருத்தி என்ற போர்வையிலேயே அரசாங்கம் இன்று பூமாரியம்மன் கோவிலை அகற்றியுள்ளது. அதே இடத்தில் ஒரு புத்தவிகாரை இருந்திருந்தால் அப்படி செய்திருப்பார்களா? எனவே அந்தக் கோவிலை அதே இடத்தில் வைத்தே அபிவிருத்திப் பணிகளை செய்ய முடியும் ஆனால் அதனை செய்யாதுள்ளமைக்கு வேறு காரணங்கள் இருக்க வேண்டும்.
தமிழ் மக்கள் அரசாங்கத்தின் அபிவிருத் திப் பணிகளுக்கு எதிரானவர்கள் அல்ல. அவ்வாறான பணிகளுக்காக பல தியாகங்களை செய்தவர்கள் எனவும் கூறினார்.
Source from Veerakesary-23.06.2013
Albion Estate people live in the Store Room for three year in the hill country of Sri Lanka, still not resettled,
மூன்று வருடங்களாக களஞ்சியசாலையில் வாழ்ந்து வரும் எல்பியன் தோட்ட மக்கள்
அக்கறையீனமாக நிர்வாகமும் அரசியல்வாதிகளும்
(அக்கரப்பத்தனை நிருபர்)
அக்கரப்பத்தனை பிளான்டேசன் கம்பெனி நிர்வாகத்திற்கு உட்பட்ட எல்பியன் தோட்டத்தின் ஆட்லோ பிரிவில் ஏற்பட்ட லயன் அறை தீயினையடுத்து பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்களை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கடந்த மூன்று வருடங்களாக தோட்டத்தின் பழைய களஞ்சியசாலையிலேயே தற்காலிகமாக தங்கவைக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
2010 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி எல்பியன் தோட்டத்தின் ஆட்லோ பிரிவின் லயன் அறை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 12 லயன் அறைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியதுடன் தோட்டத் தொழிலாளர்களது உடைமைகளும் சம்பலாகின.
இச்சம்பவத்தை அடுத்து பாதிப்புக்குள்ளான 12 குடும்பங்களும் தோட்டத்தின் பழைய களஞ்சியசாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டன.
எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத மேற்படி களஞ்சியசாலையில் கடந்த மூன்று வருடங்களாக வாழும் இவர்களுக்கு தோட்ட நிர்வாகமோ அல்லது அரசியல் வாதிகளோ வீடுகளை அமைத்து கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
கடந்த சில வாரங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தொடர்ந்து இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் குறிப்பிடுவதுடன் தமக்கான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு தகுந்த ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் வேண்டிநிற்கின்றனர்.
Source from Veerakesari-25.06.2013
Tuesday, June 18, 2013
People who are still not allowed to resettle in Mugamali have been suffering for Habitats.
மீள்குடியேற அனுமதிக்கப்படாத முகமாலை மக்கள் தங்கியிருக்க இடமின்றி நடுத்தெருவில் தவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 08:37.16 AM GMT ]
கிளிநொச்சி- பளை பிரதேசத்தில் ரயில் பாதையில் தங்கியிருந்த முகமாலை பிரதேசத்தில் மீள்குடியேற அனுமதிக்கப்படாத கிராமங்களைச் சேர்ந்த மக்களை ஒருவார காலத்தினுள் வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்றிடமின்றி தாம் நடுத்தெருவில் விடப்பட்டிருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
முகமாலை- அம்பளைவளை, இந்திராபுரம் போன்ற யுத்தம் நடைபெற்ற சில பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்படாமையினால் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை.
குறித்த பிரதேசங்களில் 1996ம் ஆண்டு இடப்பெயர்விற்கு முன்னதாக சுமார் 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துவந்தன.
இந்நிலையில் தற்போது பெரும்பாலான குடும்பங்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் பல பகுதிகளில் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் நிலையில் சுமார் 35வரையான குடும்பங்கள் தற்போது பளை பிரதேசத்திலுள்ள ரயில் பாதையில் தங்கியிருக்கின்றனர்.
இவர்களை ஒருவார காலத்தினுள் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு பணித்துள்ள அதிகாரிகள் வடக்கிற்கான ரயில் பாதை அமைப்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இது தவிர்க்க முடியாததெனவும் கூறியிருக்கின்றனர்.
எனினும் மக்களுடைய பிரதேசங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்படாமையினால், மீள்குடியேற்றத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் உறவினர், நண்பர்கள் வீடுகள் கூட இல்லாத நிலையில் மக்கள் எங்கு செல்வதென தெரியாத நிலையில் உள்ளனர்.
மேலும் தமது சொந்தப் பிரதேசங்களில் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்படாத நிலையில், தற்காலிகமாக நீண்டகாலம் வாழ்ந்துவந்த பிரதேசங்களிலிருந்து வெளியேற்றும் அதிகாரிகள் பொறுப்பாக தமக்கான மாற்றிடங்களை வழங்கவில்லையென குற்றம்சாட்டியுள்ளனர் மக்கள்.
அத்துடன், தம்மை அதிகாரிகளும், பொறுப்புவாய்ந்த அரசியல்வாதிகளும் நடுதெருவில் விட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளதுடன், முகமாலை பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அரச காணிகளில் தம்மை தற்காலிகமாகவேனும் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இதேவேளை மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படாத அல்லது கண்ணிவெடியகற்றப்படாத பகுதி என கூறப்படும் மேற்படி அம்பளைவளை, மற்றும் இந்திராபுரம் ஆகிய கிராமங்களில் எழுதுமட்டுவாழ் பகுதியூடாக வரும் சில கும்ல்கள் நுழைந்து பெறுமதியான மரங்கள், மற்றும் கைவிடப்பட்ட காவலரண்களிலுள்ள மரங்கள், இரும்புகள் போன்றவற்றை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் எவ்வாறு அந்தப் பகுதிக்குள் செல்கின்றனர் என கேள்வியெழுப்பியுள்ள மக்கள் அந்த விடயம் குறித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
source from Tamilwin.com
We want our land, people from six villages of Mullaithivu handed over the Petition to the Divisional Secretary
எமது நிலம் எமக்கு வேண்டும்: முல்லைத்தீவில் 6 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வெலிஓயா பிரதேச செயலரிடம் மகஜர் கையளிக்க ஏற்பாடு
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 01:39.21 PM GMT ]
முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச எல்லைக் கிராமங்களில் வாழும் தமிழ் மக்கள்,தமது பூர்வீக நிலங்களை தருமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு தலைமையில் வெலிஓயா பிரதேச செயலருக்கு மகஜர் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வாழும் தமிழ் மக்கள் சார்பில் கையளிக்கப்படவுள்ள மேற்படி மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேற்குறித்த ஆறு கிராமங்களிலும் வசித்துவரும் மக்களில் 90 வீதமானோர், கொக்கிளாய் வாவிக்கு மேற்கு பக்கமாகவுள்ள (அநுராதபுரம் மாவட்டத்துக்குட்பட்ட 9 சிங்கள கிராமங்களை ஒருங்கிணைத்து, முல்லைத்தீவில் 2011ம் வருடம் வெலிஓயா எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டு தனிச் சிங்களப் பிரதேசமாக்கப்பட்டுள்ள பகுதியாகும்.) தமது பூர்வீக நில புலங்களில் நெற்செய்கையை தமது வாழ்வாதாரத் தொழிலாக மேற்கொண்டு வந்துள்ளார்கள். விவசாய செய்கையே இந்த மக்களின் வாழ்வின் சாரமும், வாழ்வின் ஆதாரமுமாகும்.
பரம்பரை வழித்தோன்றலாக தமது பூர்வீக நிலபுலங்களில் உழுது, உண்டு, உழைத்து, மகிழ்ந்து வாழ்ந்திருந்த தாம், 1983ம் வருடம் ஏற்பட்ட கலவரங்களினால் எல்லைக் கிராமங்களில் ஏற்பட்ட அச்சம் மற்றும் அசாதாரண நிலைமைகள் காரணமாக தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி, மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும், மாவட்டத்துக்கு வெளியேயும் வாழ்ந்து வந்ததாகவும், 2008-2009ம் வருடங்களில் சிறீலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட வன்னி மீதான இறுதி யுத்தம், தமது இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக சிதைத்தது மட்டுமல்லாமல், மாவட்டத்தை விட்டே தம்மை வெளியேறச்செய்ததாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், 2012 ஜனவரி 19 அன்று முல்லை.கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் மீளக்குடியமர தமக்கு அரசு அனுமதி வழங்கியதோடு, தமது விளைநிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
வெலிஓயா எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டு தனிச்சிங்கள பிரதேச செயலர் பிரிவாக்கப்பட்டுள்ள பகுதிக்குள், தமது 2590 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் (நெற்செய்கை காணிகள்) அகப்பட்டுள்ளதாகவும், இதுவொரு திட்டமிட்ட நில அபகரிப்பெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கவினால் தமது காணிகளுக்கு வழங்கப்பட்ட சட்டரீதியான காணி அனுமதிப்பத்திரங்கள் தம்மிடமிருப்பதாகவும், எனவே தமது நிலம் தமக்கே வேண்டுமெனவும் அவர்கள் குறித்த மகஜரில் தெரிவித்துள்ளனர்.
Source from: Tamilwin.com